Today Bible Verse

Dr. John Scudder History in Tamil

டாக்டர் ஜான் ஸ்கட்டர்

ஐடா ஸ்கட்டரின் தந்தை

     டாக்டர். ஜான் ஸ்கட்டர் உலகத்தின் பல மூலைகளுக்கும் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். டாக்டர். ஜான் ஸ்கட்டரின் மகளாய் பிறந்தவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் (CMC) – ஐ நிறுவிய டாக்டர். ஐடா ஸ்கட்டர். தமிழ் மக்களுக்கு டாக்டர். ஜான் ஸ்கட்டரின் குடும்பத்தினர் ஆற்றிய அருட்பணியால் திண்டிவனம், வேலூர், இராணிப்பேட்டை, குடியாத்தம் ஆகிய இடங்களில் அநேக மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டனர். காலரா, பிளேக். மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோயினால் மரணத்தை நோக்கி ஓடிகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஸ்கட்டர் குடும்பத்தினர் செய்த மருத்துவப்பணிகள் இன்றளவும் தமிழ்நாட்டின் வேலூரில் தொடர்ந்து வருகிறது.

அறிமுகம்

     டாக்டர். ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ப்ரீஹோல்ட் என்ற ஊரில் ஜோசப் (வக்கீல்) – மரியா ஸ்கட்டர் என்ற தம்பதியினருக்கு 1793-ம் வருடம் செப்டம்பர் 3 தேதி செல்வ மகனாகய் பிறந்தார். New York College of Physicians and Surgeons கல்லூரியில் 1813-ம் வருடம் தமது மருத்துவ படிப்பை முடித்து தனது மருத்துவ வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். 1813-ம் வருடம் ஹாரியட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஜான் ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை கவர்ந்ததால் வருடத்திற்கு 2000$ சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மருத்துவரானார். ஐந்து வருடங்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராக பணி செய்ததால் செல்வமும் புகழும் டாக்டர். ஜான் ஸ்கட்டருக்கு குவிய தொடங்கியது. ஆயினும் கடவுள் பக்தி மிகுந்தவராய் Reformed Church க்கு சென்று கொண்டிருந்தார். அந்த நாட்களில் அநேகரை மனம் திரும்புதலுக்கு நேராய் நடத்தினார்.

ஊழியத்திற்கு தன் வாழ்வை ஒப்புக்கொடுத்தல்

    1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க ஒருவரின் வீட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது, அங்கு வரவேற்பறையிலிருந்த ஒரு துண்டு தாளின் (Pamphlet) செய்தியாகிய "அறுபது கோடி மக்களின் மனமாற்றத்திற்கு சபைகள் என்ன செய்ய வேண்டும்" என்பதை கண்டார். அதன்மூலம் இந்தியா மற்றும் சிலோனின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ பணியை குறித்து அறிந்தார். அந்த கணமே நமது அருமை இரட்சகர் இயேசுவின் குரலையும் கேட்டார்: அது என்னவெனில் “என் பிதா அனுப்பினதைப்போல நான் உன்னை அனுப்புகிறேன்”.அதற்கு ஜான் ஸ்கட்டர், “அனுப்பும் ஆண்டவரே நான் போகிறேன்’ என்றார். இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.

     செல்வ மைந்தன் உலக பெருவாழ்வை நீத்துவிட்டு, வறுமையை உவந்தேற்றுகொண்டு, கடல் கடந்து கண்கானா நாட்டுக்கு சென்று, பசியால் வாடி வதக்கி, கொடிய வெயிலின் கோரப்பிடியில் நலிந்தும் மெலிந்தும் மிஷனரியாக பணியாற்றுவதா? கூடவே கூடாது என ஜான் ஸ்கட்டரின் கையை பிடித்து கெஞ்சி மன்றாடினார் தகப்பன். ஆனால் ஜான் ஸ்கட்டரோ தமது தப்பனின் கைகளை உதறிவிட்டு ஆண்டவர் இயேசுவின் கரங்களை பற்றிக்கொண்டார்.

     தம் கணவரின் தீர்மானத்தை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தமது இரண்டு வயது பாலகனுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டார் ஜான் ஸ்கட்டரின் மனைவி ஹாரியட் ஸ்கட்டர். ஜுன் 8, 1819-ம் வருடம், 26 வயது நிரம்பிய ஜான் ஸ்கட்டர் தனது மனைவி ஹாரியட் ஸ்கட்டர் மற்றும் தனது இரண்டு வயது மகள் மரியாளுடன் இந்துஸ் கப்பலில் ஏறினார். 1819-ம் வருடம் கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். ஆறுமாத கால நெடும் கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் ஜான் ஸ்கட்டர். பின்னர் கல்கத்தாவில் மிஷனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த வேதமொழிபெயர்ப்பாளரும் மிஷனரிகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்ட “வில்லியம் கேரி-யை” செராம்பூரில் சந்தித்தார்.

ஊழியத்தின் பாதையில் பிள்ளைகள் மரணம் அடைதல்

     அதன் பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள் சூலத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் மரியா கேத்தரின் வயிற்று போக்கினால் அக்டோபர் 25-ம் தேதி மரித்தாள். இந்த சூழ்நிலையில் ஜான் ஸ்கட்டர் இவ்வாறு எழுதினார், “கடினமான சோதனை தான் என்றாலும் முறுமுறுப்பதில்லை. இயற்கையான சோகங்கள் வர வேண்டும். ஒருவேளை நாங்கள் திரும்பி சென்றால் எனது பெற்றோர்கள் எம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். இல்லை. திருச்சபையின் தலையாகிய கிறிஸ்து என்னை அமெரிக்காவிலிருந்து அழைத்து இந்த மக்கள் மத்தியில் வாழ வைப்பதற்காக நன்றி சொல்கிறேன். அழிந்து போகும் ஆத்துமாவை ஆண்டவர் இயேசுவிடம் சேர்க்கும் பணியை தகுதியற்ற அடியவனிடம் இறைவன் தந்துள்ளார்” என்றார். பின்னர் அதே வருடம் டிசம்பர் மாதம் ஸ்கட்டர் தம்பதியினர் சிலோன் வந்து சேர்ந்தனர். யாழ்ப்பாணம் பகுதியில் மருத்துவப்பணி செய்ய மிஷன் மூலம் நியமிக்கப்பட்டனர் .

    சிலோனில் புத்தர்கள் அதிகமாக இருந்தாலும் யாழ்பானத்தில் அதிக அளவு இந்து மக்கள் காணப்பட்டனர். உற்சாகமாக மக்களுக்கு மருத்துவ பணியை துவங்கிய ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே பிப்ரவரி 25 ல் மரித்துப்போனது. ஆனாலும் ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாய் நின்றனர்.

    அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர் இறையியல் கல்லூரியில் படிக்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மற்ற ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாக இறைப்பணியாற்றினர்.

இலங்கையில் ஊழியம்

     1820-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன் ஸ்டேஷன், மருத்துவனை மற்றும் பள்ளியை நிறுவினார். பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் அவைகள் தங்குவதற்கு ஓலையால் வேயப்பட்ட வீடு கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவர் ஜான் ஸ்கட்டர் என்பதை மறந்து கிறிஸ்துவிற்க்காக பாடுகளை சகித்து ஊழியத்தை அனுதினமும் செய்து வந்தார். ஜான் ஸ்கட்டர் தான் அமெரிக்காவில் இருந்து வெளிதேசத்திற்கு முதல் மருத்தவ மிஷனரியாக வந்தவர். அவரது கொள்கை என்னவென்றால், மருந்துகள் மூலம் ஒருவரது உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவை காக்க வல்ல இரட்சகரை அறிவிப்பது தான்”.பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் அதிகமாய் பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரை காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமின்றி திருச்சபைகளையும் நிறுவினார் ஜான் ஸ்கட்டர். தொடர்ந்து 19 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக மக்களுக்கு அறிவித்தனர்.

தமிழில் கிறிஸ்துவை பிரசங்கித்தல்

    1821-ம் ஆண்டு ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். அனுதினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து வந்தார். அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் பனை ஓலையில் மைகொண்டு இயேசுவின் அன்பை எழுதி அநேக பகுதிகளுக்கு சென்று கொடுத்து வருவார். அனுதினமும் காலையில் குறையாது 60 நோயாளிகள் அவரது மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்பு கைகளால் ஓலையில் எழுதிய சுவிஷேச நற்செதியை அநேக மக்களுக்கு கொடுப்பார். அவரது மருத்துவ மற்றும் ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை யாழ்ப்பாணம் பகுதியில் நிறுவினார். அதுமட்டுமில்லாமல் 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

     1836-ம் வருடம் சென்னைக்கு இடம் மாற்றப்பட்ட ஜான் ஸ்கட்டர் தமது நண்பர் வின்ஸ்லோ உடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நிறுவி சுவிஷேச துண்டு பிரதிகளை (Pamphlet) தமிழில் அச்சிட்டு வெளியிடும் ஊழியத்தை தொடங்கினார். தான் எப்படி ஒரு சிறிய துண்டுபிரதி மூலமாய் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றோமோ அதேபோல அநேக மக்களுக்கு துண்டு பிரதி மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமென விரும்பினார். துண்டு பிரதிகள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கும் முறையை ஆசியா கண்டத்திற்குள் அறிமுகப்படுத்தி அதன் மூலம் அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் அழைத்து வந்தார். சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஆறு வருடம் மருத்துவ ஊழியத்தோடு துண்டு பிரதி ஊழியத்தையும் செய்தார்.

    இந்தியா முழுவதிலும் சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லி அநேக மொழிகளில் அநேக தலைப்புகளில் சுவிஷேச பிரதியை அச்சிட்டார் ஜான் ஸ்கட்டர். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் வாலஜாவிற்கு அடிக்கடி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தார். 11 மணி நேரம் வெயிலில் நின்று பிரசங்கம் செய்து துண்டு பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்ததால் டாக்டர். ஜான் ஸ்கட்டரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று குணமடைந்த பின்பு 1846-ம் வருடம் மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி இரண்டு வருடம் மருத்துவ பணியோடு சுவிஷேச பணியையும் செய்தார். சபைகளில் நிலவி வந்த ஜாதி பார்க்கும் முறைக்கு எதிராக போரிட்டு கிறிஸ்துவின் சபையில் அணைவரும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டினார் ஜான் ஸ்கட்டர்.

ஊழியத்தின் பாதையில் மனைவியின் மரணம்

      1849-ம் வருடம் மீண்டும் சென்னையில் மருத்துவ பணியோடு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் ஹாரியட் ஸ்கட்டரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 1849-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி தமது 54-ம் வயதில் இறைவனிடம் சேர்ந்தார். மரிப்பதற்கு முன்னமாக ஹாரியட் அம்மையார் கண்களை துறந்து “மகிமையான பரலோகம், மகிமையான இரட்சிப்பு” என்று சொல்லி கண்களை மூடியுள்ளார். ஜான் ஸ்கட்டரை இது மிகவும் பாதித்தாலும் தமக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியை செய்து, சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுத்து 1854-ம் வருடம் வரை இறைப்பணி செய்து வந்தார்.

     ஒரு நாளைக்கு இரண்டு பிரசங்கங்கள் செய்து வந்த ஜான் ஸ்கட்டர், மனைவி இறந்த பிறகு வேதனையின் மத்தியிலும் ஒரு நாளைக்கு மூன்று பிரசங்கள் வரை செய்து வந்தார். 1855-ம் வருடம் தென்அமெரிக்காவிற்கு மருத்துவ மிஷனரியாக சென்றார். உற்சாகமாய் ஊழியம் செய்த ஜான் ஸ்கட்டர், 1855-ம் வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி இரவு நித்திரையில் இறைவனடியில் சேர்ந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தமது மனைவியின் கல்லறை அருகிலே புதைத்து பின்னர் ராணிபேட்டையில் அவர்களது தோட்டத்தில் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.

பிறப்பு: கி.பி: 1793 (அமெரிக்கா)

இறப்பு: கி.பி: 1855 (ராணிப்பேட்டை, தமிழ்நாடு)

Posted in Missionary Biography on January 05 at 08:26 AM

Comments (0)

No login
gif