ஃபிளேவியஸ் யோசிபஸ்
இப்போதெல்லாம் தற்கொலை முயற்சிகள் பற்றிய செய்திகளை அதிகமாக செய்தித்தாள்களில் நாம் பார்க்க முடிகின்றது. ஏன் பலர் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்கள்? பிரச்சனைகளும், வேதனைகளும் ஏற்படும்போது, தற்கொலைதான் தீர்வு என்று எண்ணுதல் மாபெரும் தவறு. வாழ்ந்துகாட்ட அழைக்கப்படும் நாம், விழுந்துவிடுவது சரியாகுமோ?
கி.பி:66 முதல் 70 ஆண்டுகளில் தனி நாடு வேண்டி, யூதர்கள் ரோமர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர். அப்போரில் வெற்றியும் பெற்றனர். இதனைக் கண்ட நீரோ மன்னன் கொதித்து எழுந்தான். வெஸ்பாசியான் என்னும் படைத்தலைவனை யூதாவுக்கு அனுப்பினான். மிகவும் சீற்றத்துடன் வந்த அவன், யூதர்களின் பட்டணங்களை ஒவ்வொன்றாக அழிக்க ஆரம்பித்தான்.
யோத்தப்பா என்று ஒரு பட்டணம், யூதர்களின் எஞ்சிய புரட்சியாளர்கள் இப்பட்டணத்தில் தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ரோமர்கள் கையில் சிக்கி, அடிமைகள் ஆவதைவிட, தற்கொலை செய்வது மேல் என்ற கொடூரமான முடிவுக்கு வந்தனர்.
புரட்சியாளர்களின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட யோசிபஸ், தற்கொலை முடிவை விட்டு விலகுமாறு அப்புரட்சியாளர்களை வேண்டினார். ஆயினும், அவர்கள் இவர் பேச்சைக் கேட்கவில்லை. தங்கள் முடிவின்படியே தற்கொலை செய்துகொண்டனர்.
இவர் கி.பி.67ஆம் ஆண்டு ரோமர்களிடம் சரணடைந்தார். இதனால் கைதியாக பிடிக்கப்பட்டு, ரோம நகருக்கு கொண்டுபோகப்பட்டார். கி.பி.70 ஆம் ஆண்டு எருசலேம் தேவாலயத்தின் அழிவை நேரில் கண்ட சாட்சி இவர். தம்மை ரோம பிரஜையாக மாற்றிக் கொண்டு ஃபிளேவியஸ் என்னும் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். இவர் ஒரு மாபெரும் எழுத்தாளர். இயேசுகிறிஸ்துவின் சரித்திரத்தை ஆதாரத்துடனும் தெளிவுடனும் வாசிப்பவர்களை கிறிஸ்துவின்பால் வழிநடத்தும் முறையிலும் எழுதி வெளியிட்டார்.
‘யூதர்களின் யுத்த சரித்திரம்’, ‘பண்டைக்கால யூதேயா’ போன்ற புத்தகங்களை எழுதிய இவர், ஓர் சிறந்த சரித்திர ஆசிரியராவார்.
பிறப்பு: கி.பி:37, (எருசலேம்)
இறப்பு: கி.பி:100, (எருசலேம்)
Comments (0)