எலிசா ஆக்னியூ
இந்திய தேசத்திற்கு அருகாமையில் உள்ள நாடு இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளதால் இதை தீவு என்று அழைக்கலாம். கடல் கடந்து வாணிபம் செய்வோர் பெருகியிருந்த காலத்தில் சுவிசேஷத்தை இலவசமாகக் கொண்டு சென்றார் ஆக்னியூ.
அமெரிக்க நாட்டில் பிறந்த இவர். 8 வயதிலேயே இறைப்பணிக்குத் தன்னை தயார் செய்தார். 32 ஆம் வயது வரை தன் கல்விப் பணிகளை நியூயார்க் நகரத்தில் முடித்தார். ஆண்டவரின் சத்தம் காதினில் தொனிக்க இலங்கை நாட்டை நோக்கி 1839 ஆம் ஆண்டு சுவிசேஷ வீராங்கனையாகப் புறப்பட்டார்.
கல்விக்கூடம் ஒன்றின் முதல்வராக தனது பணியை ஆரம்பித்தார். 41 வருடங்கள் அப்பள்ளியின் பொறுப்பை மிகவும் சிறப்புடன் ஏற்று நடத்தினார். தான் கற்றுக் கொடுத்து பெண் பிள்ளைகளின் குழந்தைகளுக்கும், அவர்களது பேரப் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கும் மாபெரும் பணியை மனநிறைவுடன் செய்தார். இதனால் “ஆயிரம் பெண் குழந்தைகளின் அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அக்காலத்தில் இவர் செய்த பணி மிகவும் சிறப்புடன் பாராட்டத்தக்கது.
இவர் கல்விப் பணியோடு கர்த்தரின் களங்கமில்லா வார்த்தைகளை கனிவுடன் கற்றுக் கொடுத்தார். இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட இளம் ஆக்னியூக்கள் உருவானார்கள். ஒவ்வொரு நாளும் தான் கற்றுக் கொடுத்த மக்களைச் சென்று பார்த்து அவர்களுடன் பேசுவது இவரது வழக்கம் ஆகும். அவர்களில் பலர் ஆசிரியர்களாகவும், பிரசங்கியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், வக்கீல்களாகவும், பிரபல தொழில் செய்பவர்களாகவும் மாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
43 வருடங்கள் இலங்கையிலேயே தங்கி, அங்கேயே ஊழியம் செய்து கோதுமை மணியாக விதைக்கப்பட்டார் ஆக்னியூ.
பிறப்பு: கி.பி:1807, பிப்ரவரி 2, (நியூயார்க், அமெரிக்கா)
இறப்பு: கி.பி:1883, ஜூன் 14, (இலங்கை)
Comments (0)