ஜார்ஜ் விசார்ட்
16ஆம் நூற்றாண்டு ஸ்காட்லாந்து நாட்டில் டண்டீ என்னும் இடத்தில் மரணத்துக்கேதுவான பிளேக் நோய் தொற்றிக் கொண்டது. மரண ஓலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி மனிதர்களைக் கலங்கச் செய்தது. அவர்கள் மரிக்கும் முன் இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பைப் பெற வேண்டாமா? அவர்களும் பரலோகம் செல்ல வேண்டுமல்லவா? பிரபல நற்செய்தியாளர் ஜார்ஜ் விசார்ட் இக்கேள்விகளால் மனம் உடைந்தார்.
டண்டீ பகுதிக்கு விரைந்து சென்றார். மரணத்தருவாயிலிருந்த மக்களின் பாவம் நீங்கச் செய்ய மன்றாடி ஜெபித்தார். மன்னிப்பைப் பெற்றுத் தந்தார். மகிழ்ச்சியான மரணங்கள் அங்கு நடந்தன. பலர் அற்புத சுகங்களையும் பெற்றனர்.
ஜார்ஜ் விசார்ட்டின் சிறந்த பிரசங்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில மக்கள் அவரை வெறுத்தனர். எனவே அவர்கள் அவரைக் கொல்லவும் திட்டமிட்டனர். மான்ட்ரோஸ் என்ற இடத்தில் அவரைக் கொல்லுவதற்காக சுமார் 60 எதிரிகள் ஒளிந்திருந்தனர். ஆனால் ஆவியானவர் அவர்களின் திட்டத்தை அபத்தமாக்கினார். ஜார்ஜ் விசார்ட் கடவுள் தன்னைக் காப்பாற்றிய விதங்களை எண்ணி மகிழ்ச்சியுற்றார்.
ஆயினும் ஜார்ஜ் விசார்ட் மீது 18 குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு கிறிஸ்துவை மறுதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தப்பட்டார். ஆனால் எவ்வித கொடுமைகளைக் கண்டும் அவர் மனம் தளரவில்லை. இறுதியாக அவரைத் தூக்கிவிட்டுக் கொல்லும் முடிவுக்கு வந்தனர்.
கந்தகத்தூள் நிரம்பிய பாரமான பல பைகளை அவர் மீது கட்டினர். பாரம் தாங்க முடியாமல் அவரது முழங்கால்கள் முடங்கின. இயேசுவை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிட்டு, எதிராளிகளை மன்னிக்கும்படி வேண்டினார். சற்று நேரத்தில் அவரை தீயிலிட்டு எரிக்கும் போதே தூக்கிலும் தொங்க விட்டார்கள். அவரது ஆவியோ மகிழ்ச்சியான இடம் நோக்கி விரைந்தது. கிறிஸ்துவுக்காக தன் ஜீவனையும் பெரிதாக எண்ணாமல் இரத்த சாட்சியாக மரித்தார்.
பிறப்பு: கி.பி:1513, (மாண்ட்ரூஸ், ஸ்காட்லாந்து)
இறப்பு: கி.பி:1548, மார்ச் 01 (ஸ்காட்லாந்து)
Comments (0)