சீர்திருத்தல்!!!

பரிசுத்த வேதம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் காலத்தை சீர்திருத்தல் உண்டான காலம் (எபிரெயர் 9:10)  என்று இயம்புகிறது. இயேசு கிறிஸ்து எதில் ஏற்படுத்தினார் சீர்திருத்தலை??

எங்கு சீர்திருத்தல் தேவைப்பட்டதோ அங்கு! ஆம் சீர்திருத்தல் முதலாவது தேவைப்பட்ட இடம் மனித மனம்.

மனித இனம் தோன்றியது முதல் மனிதனின் மனது அதின் நோக்கம் மறந்து செயல்பட்டுவருகிறது. அது எதனால் என்று ஆண்டவர் அறிந்திருந்தார், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் அதை வெளிப்படையாகவே (மாற்கு 7:6). “இருதயம் தூரம் போனது” என்பது படைத்த கடவுளை விட்டு தூரமாய் சென்று, தனக்கென ஒரு வழியைத்தெரிந்து கொண்டு, படைத்தவரையும், நம் படைப்பின் நோக்கத்தையும் மறந்துவிட்டது மனுக்குலம் என்று கூறின ஆண்டவர் அதிலிருந்து திரும்பும் வழியையும் அதே அதிகாரத்தில் கற்றுக்கொடுக்கிறார். அதுநாள் வரையில் வேதபண்டிதர்கள் எல்லாம் சொன்னபடியே, வெளிப்புற சுத்தத்தை கடுமையாக கடைபிடித்து வந்த மக்களின் பார்வையில் மாற்றத்தை கொண்டுவருகிறார் ஆண்டவர், ஆம் ‘வெளியிலிருந்து உள்ளே செல்வது அல்ல உள்ளிருந்து வெளியெ புறப்பட்டுவருவதே தீட்டு’ என்கிறார், சற்றே மக்கள் யோசித்திருக்க வேண்டும், இதுவரையில் தாங்கள் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கேட்டு அதை அப்படியே செய்துவந்ததை மாற்கு 7:14, செவிகொடுப்பது மாத்திரமல்ல “செவிகொடுத்து ‘உணருங்கள்’” என்று கூறியதன் மூலம் அவர்களின் புரிந்துகொள்ளுதலில் இருக்கும் தடையை சம்மட்டி போன்ற தன் வாயின் வார்த்தைகளால் உடைத்து, முக்கியமற்றதாகக் காட்டுகின்றார். அப்படியென்றால் அந்த மக்களுக்கு எதுதான் முக்கியம்? என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டுமல்லவா! அதனால் இன்னும் அவர்களின் புரிந்துகொள்ளுதலை ஆழமாக்க, அதிக விளக்கமாக தான் சொன்ன கருத்துக்களை விளங்கிக்கொள்ளாத சீஷர்களிடம்,மாற்கு 7:20 – 23ல் இருதயத்திலிருந்து புறப்படும் காரியங்களை வெளிச்சம் போட்டு காட்டி, இவைகலல்லவோ உங்களை தீட்டுப்படுத்துகின்றன என்று அவர் சொன்ன கருத்துக்கள், அதுவரையில் இருளை ஒளியென்றெண்ணிய மக்களின் இருள் படர்ந்த வாழ்கையில் திருப்பப்பட்ட தேவவெளிச்ச வெள்ளம் அதைக் கேட்டு உணர்ந்த, சரியான புரிந்துகொள்ளுதலுக்குள் வந்த அத்தனை பேரின் வாழ்க்கையிலும் ஒரு சுத்திகரிப்பை, சீர்திருத்தலைக் கொண்டுவருவது நிச்சயம்தானே!!! ஆம்    1 யோவான் 1:5ன் அனுபவமும் அதுதானே!!    

 

இந்த சீர்திருத்தல்(அ) சரியான புரிந்துகொள்ளுதலைதான், “மனம்திரும்புதல்” என்ற புதிய ஏற்பாட்டின் அஸ்திபாரமாகக் காண்கிறோம். மனம் திரும்புதல், அதாவது தன் போய்கொண்டிருக்கும் திசையிலிருந்து பார்வை, எண்ணம், செயல்பாடுகள் எல்லவற்றையும் சரியான பாதைக்குத் திருப்புதல். நிரந்திர அல்லது தொடர் மனம்திரும்புதலுக்கு,, மனித மனம் மீண்டும் தான் விட்டு வந்ததை பார்க்க “பின்திரும்பாமல்” இருக்கவேண்டியது அவசியம். அதற்கென்று அந்த மனதை ஒவ்வொரு நாளும் புதிதாக்கும்படி ஆண்டவர் ஆலோசனை தருகிறார், ரோமர் 12:1-2, எபேசியர் 4: 11-15,21-24

 

கேட்டு உணர்தலில் என்ன நடக்கிறது என்று விளக்க விரும்புகிறேன். ஒரு கருத்தைக் கேட்டவுடன் புரிந்துகொள்ளுதல் வருமென்றால் நாம் சுவிசேஷம் அறிவிப்பதும், அதின் பலனைப் பார்ப்பதும் மிகவும் எளிமையானது என்றாகிவிடுமே. பின்பு எப்படி?  இங்கு தான் பரிசுத்த ஆவியானவரின் அளப்பரிய கிரியைகள் மறைந்து, அதேசமயம் மிகஆழமாக நடப்பதைப் பார்ப்போம்(உணர்வோம்). சீர்திருத்தல் உண்டாக தூரம்போன நம் இருதயம்/மனம் (மாற்கு 7:6) செவிகொடுத்தவுடன்,(இடம் கொடுத்தால்) அந்த வார்த்தைகளை நம் இருதயம் உணர ஆரம்பிக்கும், அப்பொழுது இருதயத்திலிருந்து புறப்படும் கேடுகளை அது வெறுக்கத்துவங்கும், நம் இருதயம் தவறுகளை விட்டுவிட முயற்சிக்கும்போது ஒரு வெறுமை நம் இருதயத்தை நிரப்பும், அந்த நேரத்தில் ரோமர்5:5ன்படி “தேவ அன்பு இருதயத்தில் ஊற்றப்படும்”, சரியாகச் சொல்லப்போனால் தேவ அன்பையும், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டான இரட்சிப்பையும் ‘பார்க்க மற்றும் புரிய’ முடியாதபடி இருந்த தடைகள் உடையும், தேவனையும் என்னையும் பிரித்த திரை கிழியும், அதுவரையில் வெளியில், என்னைச் சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்த தேவன்பின் வெள்ளம் என்னுள் திருப்பப்பட்டு, முழுவதும் புதிதாகுவேன், புதுசிருஷ்டி, புதிதாய் பிறந்தவனாவேன்.ஆம்! 1யோவான் 4:8ல் சொல்லப்பட்டபடி தேவன் அன்பாகவே இருக்கிறார், அவர் அருகில் வர வர நம்மையும் அந்த அன்பு நிரப்புவது நிச்சயம்தானே!!

 

 

இரண்டாவது – 1 பேதுரு 1 : 15 -16ன்படி, தேவன் விரும்பும் பரிசுத்தத்தை நம் இருதயம் வாஞ்சிக்கத் தொடங்கும், தொடங்கவேண்டும், 1 பேதுரு 1:14ல் “முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல்,” முன்னே உங்கள் அறியாமையினாலே – இது எந்த காலம்? புரிந்துகொள்ளுதல் தவறாயிருந்த காலம், உங்களுக்குள் சீர்திருத்தல் இல்லாமல் அறியாமை இருந்த காலம், இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், சீர்திருத்தலினால் உங்கள் இச்சை இப்பொழுது தேவ காரியங்கள் பக்கம் வாஞ்சையாகத் திருப்பப்பட்டுவிடும்.(அன்பில் நிலைத்திருந்தால் எபேசியர் 3:17). அன்பில் வேரூன்றினால் (கீழே வேர் பற்றினால் மேலே நிச்சயம் கனி உண்டு ஏசாய 37:31) பரிசுத்தம் என்னும் கனி நிச்சயம் வெளிப்பட்டே ஆகும்.

இதுதான் ஆண்டவர் இயேசுவின் சீர்திருத்தல். எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான மனித மனதை சீர்திருத்த ஆண்டவர் இயேசுவின் வழி எவ்வளவு தொலை நோக்கும் சரியானதுமாக இருக்கிறது என்று பாருங்கள். நண்பா பக்தன் பாடியது போல் “உணர்ந்திதை உடனே உன்னதனண்டை சரண் புகுவாய் இத்தருணம்”



Posted in Short Message on August 29 at 09:09 AM

Comments (2)

No login
gif