மண்ணைவிட்டு மன்னவனோடு!! நிழல் விட்டு நிஜத்திற்கு!!

’மேகமீது தூதரோடிதோ’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் , எவரும் மறுக்க முடியாது. இந்த பாடலில் ஒரு சரணம் இப்படியாக வரும்

மணவாளன் இயேசு வருகிறார் அதோ அதோ
  மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமையாகவே
  மாதேவ தூதன் முழங்கவே

கேட்கும் போதே அந்த நாளை ஆவலோடு எதிர்நோக்க மனது வாஞ்சிக்கிறது, ஆசை பெருகுகிறது, இது மற்ற யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் தானே நமக்கு..கனத்த இதயத்தோடு தான் இதை சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், காரணம், இந்த நம்பிக்கை நமக்குள் நிரம்பியிருந்தாலும் அருமையானவர்களின் இழப்புகளின்போதெல்லாம் இவைகள் நிழல்களே. இதே நிலையில் தான் தெசலோனிகேயில் இருந்த சபையார் இருந்தனர். பவுல் சொல்லும் வார்த்தைகளை
1 தெசலோனிகேயர் 4 : 18ல் கவனித்தால் “ஆகையால் இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்”

மகிமையான வார்த்தைகள், தேற்றுதல் தேவைப்படும் உள்ளங்களுக்கு தேவ வார்த்தைகள் தாம் உண்மையான மருந்து. மனித வார்த்தைகளாய் பவுல் பேசியிருந்தால் அது இந்தநேரம் மறைந்துபோயிருக்கும் அவர் கொரிந்தியருக்கு எழுதுவதுபோல் ‘வெளியாக்கப்பட்ட தேவ இரகசியங்களை’ அல்லவா பேசியிருக்கிறார். நிரப்பமுடியாத வெற்றிடத்தை நமக்கு அருமையானவர்கள், இந்த பூமியில் ஏற்படுத்திவிட்டு, கர்த்தரோடு மகிழ்ந்திருப்பார்கள், துக்கம் நமக்கு; இவ்வளவு நாள் துக்கமும் வேதனையும் நிறைந்திருந்த அவர்கள் வாழ்க்கை இனி நித்தியமாய் மகிழ்ந்திருக்கும், அருமை ஆண்டவர் இயேசுவை நேரில் பார்த்து, மெய்யாகவே, அவர்கள் நம்மை மறந்து, இன்னும் சொன்னால் அவர்களையே மறந்து, ஆண்டவரை முகமுகமாகக் கண்டு, ஆனந்த கண்ணீருடன், தேவமகிமையாம் ‘சொல்லி முடியாத மகிமையில்’ சேர்ந்து திளைத்துக்கொண்டிருப்பார்கள்.
 
வேத புத்தகமும், அதில் அவர்கள் படித்துமட்டுமே இருந்த அநேக ரகசியங்களும் இப்பொழுது அவர்களுக்கு விளங்கியிருக்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யப்பட்டுக்கொண்டிருந்த தேவ மகிமை, ஆதியிலே ஆதாம் இழந்த மகிமை, ஆலோசனையில் ஆச்சரியமுள்ள ஆண்டவரின் அளவிடப்படமுடியாத அந்த மகிமை இப்பொழுது அவர்கள் கண்முன் நிஜமாய் மாறியிருக்கும். இதுவரையில் கனவிலும், நிஜத்திலும் ஏக்கமாக மட்டுமே இருந்த பொன்வீதியும், தேவதூதர்கள் செய்யும் ஒழுங்கான ஆராதனையும், ஜெயவீரரின் தொனியும், கற்பனையிலும் எப்படி இருக்கும் என்று யோசிக்க முடியாமல் தவித்த கேரூபீன்களும் , சேராபீன்களும், மனுஷரில் ஒருவரும் காணக்கூடாதவரும் கண்டிராதவரும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமான தேவனின் முழுமையும், கண் முன்னே நிதர்சனமாய், நிஜமாய், யாரும் பறிக்க முடியா நித்தியமாய் கிடைத்திருக்கும். ஒரு நொடியில் பூமியில் சாவை ருசித்த அவர்கள் சாவாமைக்குள் பிரவேசித்து சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவரை சந்தித்திருப்பார்கள். இவைகளையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது “அய்யோ அவர்கள் போய்விட்டார்களே” என்று புலம்பத்தோன்றவில்லை, மாறாக நமக்கு முன் போய்விட்டார்களே என்று பொறாமை கொள்ளத்தோன்றுகிறது அல்லவா.
ஆம் பவுல் சொல்கிறது போல் ”உயிரோடிருக்கும் நாம் முந்திக்கொள்வதில்லை”. அவர்கள் நினைவுகள் நிச்சயமாய் நம்மைச்சுற்றிலும் இருக்காது, காரணம் அவர்கள் இப்பொழுது நிஜமாய் வாழத்துவங்கிவிட்டார்கள். நாம் இன்னும் மாயைக்குள் தான் உள்ளோம்.
 
நிஜத்தைவிட்டு அவர்கள் மாயைக்குள் வரப்போவதில்லை, தாவீது சொல்வதுபோல “நான் அங்கே போவேனே தவிர, அவர்கள் இங்கே வரப்போவதில்லை”.  ஆம் நாம் தான் இனி மாயையைவிட்டு மகிழ்ச்சிக்குள் பிரவேசிக்க, மகிமைக்குள் பிரவேசிக்க முயற்சிசெய்ய வேண்டும்.
இதை அழகாக இந்த பூமியிலிருந்தபோதே அன்புத்தாய் சாராள் நவரோஜி அவர்கள் “பரலோக ராஜ்ஜிய வாசி” என்னும் பாடலில்
 
”திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரம தேசம்
தூய பிதா ஒளி வீசும் தேசம்
மேலோக பக்தரின் சொந்த தேசம்” என்று பாடியள்ளார். அவர் பாடல்கள் அத்தனையிலும் பரலோக ஏக்கமும், பரன் இயேசுவை தரிசிக்கும் நாளுக்காய் தவிக்கும் உள்ளான மனிதனின் கூக்குரலும் அதிகமாய் வெளிப்பட்டிருக்கும்.
 
அந்த நாள், நல்ல நாள், பாக்கிய நாள்...நாமும் ஆயத்தமாகிடுவோம் அந்த பொன்னாளுக்காய். எனக்குப்பிடித்த மற்றுமொரு பரலோக பாட்டு, இது நான் தனித்திருக்கும் அநேக நேரங்களில் என் ஜெபப்பாடல்.
 
“மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன் 
தூய தூய தேவா
அல்லேலூயா தொனி கேட்குதே
அங்கே சென்று நானும் பாடுவேன்
 
கல்லறைத்தோட்டம் அங்கே இல்லை
குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை
சாவு பவனி அங்கே இல்லை
சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை”
 
மற்றுமொரு பாடல்...
 
“துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்
 
ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்
 
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் ”
 
நிச்சயம் நிச்சயம் நிச்சயமாய்...
 
ஆமென், ஆமென், ஆமென்.
 


 
Posted in Devotion on September 04 at 03:25 AM

Comments (0)

No login
gif