மனதார மன்னிப்பு

ஒருபெண்மணி புற்று நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர். ஒரு நாள் மருத்துவர்கள் சொன்ன முடிவை தனது 12, 14 வயது மகன்களிடம தெரிவித்தாள். உடனே மூத்தவன் ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து தாயின் அருகில் அமர்ந்து மாற்கு 11:24-ஐ வாசித்தான். 'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்' என்ற வசனத்தை கேட்டவுடன் தாய் ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாலும் இந்த வசனம் வேதத்தில் இருப்பதை அறிந்திருக்கவில்லை. அன்றிரவு படுக்கைக்கு செல்லுமுன் மகன் வாசித்த தேவ வசனத்தை எடுத்து வாசித்தாள். அதை தொடர்ந்துள்ள வேத வசனங்களையும் வாசிக்க தூண்டப்பட்டாள். 'நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி அந்த குறையை அவனுக்கு மன்னியுங்கள்'. - (வசனம் 25). இவ்வசனம் அவளுடைய உறவினர்கள் பேரில் அவளுக்கிருந்த மன்னிக்க முடியாத ஆவியை அவளுக்கு உணர்த்திற்று.
 
தன் உறவினர்கள் அனைவரையும் மன்னிக்க தனக்கு உதவி செய்யும்படி கர்த்தரிடம் மனங்கசந்து அழுது மன்றாடினாள். என்ன ஆச்சரியம்! அநேக மாதங்களாக நித்திரையின்றி கஷ்டப்பட்ட தாய், ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் உறங்குவதுபோல, அன்றிரவு நன்றாக உறங்கினாள். மறுநாள் காலையில் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்ந்து மருத்துவரை காண சென்றாள். புற்று நோய் முற்றிலும் மறைந்ததை கண்டு மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர். இப்போது நல்ல சுகத்துடன் புற்று நோயாளிகள் மத்தியில் ஊழியக்காரியாக தொண்டு செய்து வருகிறாள்.
.
மன்னிப்பு என்பதற்கான கிரேக்க பதத்திற்கு விடுதலையாக்குதல் என்ற ஒரு அர்த்தமும் உண்டு. நமக்கு விரோதமாக தவறிழைத்தவர்களை மன்னிப்பதின் மூலமாக நாம் அவர்களை விடுதலையாக்குவதோடு மட்டுமல்லாமல், நம்மையும் விடுவித்து கொள்கிறோம். மற்றவர்களை முழு இருதயத்தோடும் மன்னிக்க முடியாதவர்களால் மெய்யான விடுதலையை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. பிறரை மன்னிக்க முடியாத ஆவி, கோபம், பழி வாங்குதல், கசப்பு, சீற்றம் முதலான குணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நோய் நிறைந்தவர்களாகவே காணப்படுவார்கள். உடனுக்குடன் மன்னித்து தங்களுடைய இருதயத்திலிருந்து அன்புகூரக்கூடிய ஒரு கூட்ட ஜனங்களே தேவனுக்கு தேவையாயிருக்கிறார்கள்.
 
 
 
மன்னித்தல் நொறுங்கிய இருதயங்களை குணமாக்கும், முறிந்துபோன விவாகங்களை இணைத்து விடும். சிதைந்து போன வாழ்க்கையை சீர்படுத்தி விடும்;. தகர்ந்து போன குடும்பங்களை ஒன்றாக்கிவிடும். மன்னிக்கும் ஜனங்களுக்கு மாத்திரமே ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இவர்கள் மட்டுமே, சிறந்ததொரு வருங்காலத்தை மற்றவர்களுக்கு வழங்கக்கூடும்.
.
பிறரை மன்னிக்க முடியாதவர்கள் மரிக்கும்போது கூட பற்களை கடிக்கின்றனர் என கூறுவார்கள். ஆனால் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும்போது, உரைத்த ஏழு வார்த்தைகளில் முதலாவதும், கடைசியும் 'பிதாவே' என ஆரம்பிக்கின்றன. 1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், 2.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். பிறரை மன்னித்தவர்களால் மாத்திரமே தங்கள் ஆவியை பிதாவின் கரங்களில் சமாதானத்துடன் ஒப்புக்கொடுக்க முடியும். பிறரை மன்னிக்க முடியாதவர்கள் வாழும்போது இருந்த கசப்புடனே புறம்பான இருளுக்குள்ளும் செல்லுவர். மற்றவர்களை மன்னிப்போமா? சுகமுடன் வாழ்வோமா?
 
 
 
'நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். - (மாற்கு 11:25-26)
Posted in Short Message on February 12 at 05:25 PM

Comments (0)

No login
gif